தெற்காசிய இளைஞர் தலைவர்கள் முன்னெடுப்பின் (Young South Asian Leaders Initiative – YSALI) பிரதிநிதிகள் குழுவினர் (19.08.2025) அன்று இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
ஒகஸ்ட் (17.08.2025) அன்று முதல் (21.08.2025) வரை கொழும்பில் நடைபெறும் தெற்காசிய இளைஞர் தலைவர்கள் பிராந்திய செயலமர்வில் கலந்துகொள்ளும் இக்குழுவில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 80 பேர் உள்ளடங்கியிருந்தனர்.
பாராளுமன்ற விஜயத்தின் போது இக்குழுவினர் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். இச்சந்திப்பில் இலங்கை பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் இலங்கையின் தற்போதைய சுமூக அரசியல் மாற்றத்தில் இலங்கை இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து சபாநாயகரினால் விளக்கிக் கூறப்பட்டது.
புதிய தொழில்நுட்பம் நிறைந்த காலப்பகுதியில் பிறந்த இளைஞர் தலைமுறையினர் உலகை சிறந்த இடமாக மாற்றுவதில் தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளார்கள் என்றும், இதற்கு தெற்காசிய இளைஞர் சமூகத்தினர் என்ற ரீதியில் தலைமைத்துவத்தை வழங்குவதற்கான பொறுப்பு இந்தக் குழுவினருக்கு இருப்பதாகவும் சபாநாயகர் இங்கு குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் இளைஞர் தலைவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சபாநாயகர் பதில் வழங்கினார். தெற்காசியாவின் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பிராந்திய இராஜதந்திரத் தொடர்புகளைக் கட்டியெழுப்புவது மற்றும் தெற்காசிய நாடுகளில் சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










