ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டமங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக வங்கி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய வலய உப தலைவர் ஜொஹன்னஸ் சட் (Johannes Zutt) உள்ளிட்ட உலக வங்கி பிரதிநிதிகள் 15.09.2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
இச் சந்திப்பில், இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபொன்சு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையின் எதிர்கால வளர்ச்சி இலக்குகளை அடைவதில் உலக வங்கி குழுமம் எவ்வாறு ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர்.
டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட குறுங்கால நன்மைகள் பெறக் கூடிய துறைகளை அடையாளங் கண்டு அதன் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி வடக்கு மற்றும் கிழக்கின் வளர்ச்சி குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தினால் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தேவையான சட்ட கட்டமைப்பைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தற்பொழுது எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் கொள்கைத் திட்டம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி,சர்வதேச அளவில் ஊழல் நிறைந்த நாடு என்று முத்திரை குத்தப்பட்ட இலங்கை, தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வெளிப்படையான திட்டத்தின் காரணமாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் படிப்படியாக ஸ்திரமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
உலக வங்கியின் சார்பில், இலங்கை, நேபாளம் மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் துறைசார் பணிப்பாளர் டேவிட் சிஸ்லன் (David Sislen)மற்றும் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் கெவோர்க் சர்க்கிசியன் (Gevorg Sargsyan) ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










