இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனமான Connaissance De Ceylan இன் ஒருங்கிணைப்பின் கீழ் சுற்றுலத்துறையை மேம்படுத்துவதற்காக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள 11 பேர் கொண்ட ஜப்பான் தூதுக்குழு,14.03.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்தது.
இலங்கை மக்களின் வரலாறு, புத்த மதத்தின் வருகை மற்றும் வளர்ச்சி, பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், சம்பிரதாயபூர்வ பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், பொருளாதாரப் பயிர்கள் போன்றவற்றை ஆராய்ந்து, அது தொடர்பில் புரிந்து கொள்வதே இந்தக் தூதுக்குழுவின் நோக்கமாகும்.
அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக் கூடிய தலையீடுகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதுடன், அவர்கள் பெற்ற அறிவை ஜப்பான் மக்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.
அதேபோன்று, ஜப்பானில் முன்னணி சுற்றுலாத் தலமாக இலங்கையை பிரபல்யப்படுத்தல், கொழும்பு, அநுராதபுரம், சீகிரியா, மஹியங்கனை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் கலாசார மரபுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வது போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு மேலதிகமாக, சபுகஸ்கந்த புராண விகாரை, மிஹிந்தலை, அநுராதபுரம், சிகிரியா, தம்பான, மல்வத்து மகா விகாரை, துறைமுக நகர் உட்பட பல்வேறு சிறப்புமிக்க இடங்களுக்கும் தூதுக்குழுவினர் விஜயம் செய்தனர்.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










