சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு, மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் பயணிகள் தமது போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகும்புற பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தின் முகாமைத்துவ உதவியாளர் நிமல் வெத்தசிங்க இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் 8 ஆம் திகதி முதல் நேற்று 19 ஆம் திகதி வரை இந்த எண்ணிக்கையிலான பயணிகள் இந்த போக்குவரத்து மையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
பயணிகளின் வசதிக்காக 2,600-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை என்பன இணைந்து இந்தப் பேருந்து சேவைகளை ஒருங்கிணைத்திருந்தன.
பயணிகளின் நெரிசலைக் கருத்திற் கொண்டு மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களாக விசேட கால அட்டவணையின் கீழ் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், நாளை (21.04.2026) முதல் மீண்டும் வழமையான கால அட்டவணையின் பிரகாரம் பேருந்துகள் இயங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










