சர்வதேச எல்லைப்புற சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு துறைமுகத்தில் ரூ. 168 மில்லியன் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5 மாடிகளைக் கொண்ட துறைமுக சுகாதார அலுவலகம் (Port Health Office) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்பில், சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) அமலாக்கத்தின் கீழ் இத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தனர்.
கடல் வழியே நாட்டிற்குள் நுழையக்கூடிய தொற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிதல், நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் அவசர சுகாதார அச்சுறுத்தல்களைக் கையாளுதல் போன்ற சேவைகள் இப் புதிய அலுவலக வளாகம் ஊடாக ஒருங்கிணைக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இக்காலகட்டத்தில், துறைமுக அமைப்பின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வது எதிர்காலப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமான முதலீடாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமதா (Akio Isomata), இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான IOM இன் செயல்பாட்டுத் தலைவர் கிரிஸ்டின் பார்கோ (Kristine Parco), சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சலிந்த பண்டார, பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் எஸ். எம். ஆர்னல்ட், துறைமுக சுகாதார அதிகாரி டொக்டர் ஏ. எஸ். மஹிபால, லக்ஷி வசந்த உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









