மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அதிகாரிகள் 31.08.2026 அன்று கள விஜயம் மேற்கொண்டு மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்தித்திறன் தொடர்பான செயற்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் வழிகாட்டலின் கீழ், மாவட்ட செயலகத்தில் தேசிய உற்பத்தித்திறன் போட்டிக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதனின் அளிக்கை மூலம் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது, மாவட்ட செயலகத்தின் தலைமைத்துவம், சேவை பெறுநர்கள், திட்டமிடல் மற்றும் மூலோபாய அபிவிருத்தி, மனித வளம், செயன்முறை மற்றும் அறிவு முகாமைத்துவம், நிறுவனப் பெறுபேறுகள் மற்றும் புத்தாக்கத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேசிய உற்பத்தித்திறன் செயலக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மேலும், மாவட்ட செயலகத்தின் அனைத்து கிளைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்புகளை மேற்கொண்டனர்.
இதன்போது, தேசிய உற்பத்தித்திறன் செயலக அதிகாரிகளினால் மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் உயர் அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றுக்கான விளக்கங்களும் பெறப்பட்டன.
கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பிரதேச செயலகங்களும் உற்பத்தித்திறன் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது.
மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறனை மேலும் மேம்படுத்தி சேவை பெறுநர்களுக்கு வினைத்திறனானதும் தரமானதுமான சேவையை வழங்கும் நோக்கில் இவ்வாறான மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








