வடக்கு மாகாணத்தில் நெல்லை அறுவடை செய்யக்கூடிய விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திலெடுத்து அறுவடைசெய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் இணையவழியில் 15.01.2025 அன்று இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து ஆளுநர் மற்றும் பிரதம செயலர் இ.இளங்கோவன் ஆகியோர் இணைந்துகொண்டனர்.
விவசாயிகள் நெல் அறுவடை காலத்தில் திடீரென ஏற்பட்ட மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்கள் வான்பாய்வதாக மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்துக்கான நீர்வரத்து அதிகமாக உள்ளபோதும் குறைந்தளவான நீரே திறந்துவிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் சு.முரளிதரன் சுட்டிக்காட்டினார். இதேவேளை மாவட்டத்தின் சில பகுதிகளில் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மன்னார் மாவட்டத்திலும் சில வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன எனவும் கலந்துரையாடலின்போது மாவட்ட இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் சிறிய நீர்பாசனக் குளங்கள் இரண்டு உடைப்பெடுத்துள்ளதாக இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளங்களில் 47 குளங்கள் தற்போது வான்பாய்ந்து கொண்டிருப்பதாக மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார்.
தற்போதைய நிலையில் மழை வீழ்ச்சி குறைந்து வருவதாகவும் குளங்களுக்கான நீர் வரத்து குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கு அமைவாக இன்று மாலையிலிருந்து படிப்படியாக வான்கதவுகள் மூடப்படும் என்றும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நெல்லை அறுவடை செய்யக் கூடிய விவசாயிகள் அதனை அறுவடை செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதன் ஊடாக அழிவுகளைக் குறைக்க முடியும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இக் கலந்துரையாடலில் துறைசார் அதிகாரிகள் இணையவழியில் கலந்துகொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










