இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் பிரான்ஸ் குடியரசுக்கும் இடையிலான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், இருதரப்பு ஒப்பந்தத்தில் அதிகாரபூர்வமாக கையொப்பமிடப்பட்டது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ கையொப்பமிடும் நிகழ்வு 16.06.2025 அன்று கொழும்பில் நடைபெற்றது.
குறித்த ஒப்பந்தம், இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல் திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இது, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் உறுதியை வலியுறுத்துகிறது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பை வழிநடத்துவதில் ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து, பிரான்ஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதன் தலைமையும், அர்ப்பணிப்பும், பயனுள்ள ஒத்துழைப்பும், இலங்கை எதிர்கொண்டு வரும் பொருளாதார சவால்களை சமாளிக்க உதவியுள்ளன.
இருதரப்பு ஒப்பந்தத்தில், இலங்கை அரசாங்கத்திற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்தா சிறிவர்தன மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்திற்காக திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பலதரப்பு விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கைத் துறையின் உதவிச் செயலாளர் வில்லியம் ரூஸ் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இக் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பிரான்ஸ் குடியரசுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த உதவும்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










