கர்ப்பிணி தாய்மாரின் போசாக்கு திறனை மேம்படுத்துவதற்காகவும் குடும்ப வருமானத்தின் சிறுபகுதியை உறுதிப்படுத்துவதற்காகவும் முருங்கை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் 07.10.2025 அன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட
தெரிவு செய்யப்பட்ட 45 கர்ப்பிணி தாய்மாருக்கு 150 முருங்கை மரக் கன்றுகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்திய அதிகாரிகளான வைத்தியர் தனுஷியா விக்னேஸ்வரன், குயிந்தன் ரெட்னதேவ், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி தேவசிங்கம் திலக்சன், மட்டக்களப்பு வைத்தியசாலைகள் நண்பர்கள் சங்கத்தின் தலைவியும், லண்டன் மருத்துவ நிபுணர் சங்கத்தின் போசகருமான வைத்தியர் காந்தா நிரஞ்சன், earn ceylon நிறுவனத்தின் பணிப்பாளர் குணசீலன் சதீஷ்குமார், இணைப்பாளர் எந்திரி தயாளசீலன் மயூரன் ஆகியோர் கலந்துகொண்டு முருங்கை மரக்கன்றுகளை வழங்கி வைத்துள்ளனர்.
மட்டக்களப்பினை மையமாகக்கொண்டு இயங்கும் சமூக உணர்வு செயற்பாடுகளுடன் இலையூட்டல் முருங்கை இலை பாவனையை ஊக்குவித்தலின் ஒரு பகுதியாக முன்னெடுத்துவரும் ஏர் சிலோன்-Earn Ceylon நிறுவனம் மட்டக்களப்பு பிரதேசத்தில் பல சமூக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாகவே வைத்தியர் காந்தா நிரஞ்சன் அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களிடையே இரத்த சோகை நோயை கட்டுப்படுத்துவதற்கு முருங்கை இலைகளின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் பற்றி இதன்போது விளக்களிக்கப்பட்டது.
















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










