கடந்த சில தினங்களாக நீடித்து வருகின்ற சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று (24.04.2025) காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென போக்குவரத்து பொலிஸார் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் .
குறிப்பாக நுவரெலியா – ஹட்டன், நுவரெலியா -கண்டி மற்றும் நுவரெலியா – பதுளை போன்ற பிரதான வீதிகளிலும் சீத்தாஎலிய, லபுக்கலை, குடாஓயா, மார்காஸ் தோட்டம், உலக முடிவு பிரதான வீதி, கந்தபளை, நானுஓயா, நானுஓயா புகையிரத நிலையம், ரதல்ல குறுக்கு வீதி, டெஸ்போட், கிரிமிட்டி ஆகிய பகுதிகளிலும் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
அதன்படி இன்று வெள்ளிக்கிழமை காலையில் பனிமூட்டம் அதிகளவில் காணப்பட்டதால் நுவரெலியாவில் முக்கிய பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவுக்கு வருகை தரும் புதிய வாகன சாரதிகள் தமது வாகனத்தின் முன்பக்க விளக்குககளை ஒளிரச்செய்து அவதானத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டுமென்று போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை நுவரெலியாவில் கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது. இதனால் போக்குவரத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










