Chilli Chips நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள திரைப்படங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று 23.10.2025 அன்று மட்டக்களப்பு ஊடக மையத்தில் நடைபெற்றது.
இவ் ஊடக சந்திப்பில் இயக்குநர் ஜனிதன் மற்றும் இசையமைப்பாளர்களான ஏ.ஜே.சங்கர்ஜன் மற்றும் கிஷாந்த், நடிகரும் Chilli Chips நிறுவன பொறுப்பதிகாரியுமான வேட்டையன் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனடிப்படையில் 02.11.2025 அன்று மாலை 04 மணிக்கு மட்டக்களப்பு விஜயா திரையரங்கில் ஒரு நுழைவுச்சீட்டில் மூன்று திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதாக Chilli Chips நிறுவன பொறுப்பதிகாரி வேட்டையன் இம்ரான் தெரிவித்தார்.
இயக்குநர் கணேசலிங்கம் புஸ்பகாந்தின் இயக்கத்தில் உருவான அண்ணன் – தங்கை உறவின் பாசமும் வாழ்வியல் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் உணர்ச்சி பூர்வ கதையான இலங்கையின் தங்கைக்கோர் கீதம், இயக்குநர் ஜனா மோகெந்திரன் இயக்கத்தில் உருவான மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் எதிர் நோக்கும் சவால்களை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு திரைப்படமான யாதவின் அன்பின் பாதை மற்றும் இயக்குநர் ஜெனிதன் இயக்கத்தில் வெளியாகும் யுத்தத்தில் கணவனை இழந்த தாய் தனது மகளுடன் எதிர்கொள்ளும் வாழ்வியல் போராட்டங்களை கூறும் அன்பின் மினுமினுப்பு ஆகிய திரைப்படங்கள் திரைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இத் திரைப்படங்களில் இலங்கையின் தங்கைக்கோர் கீதம், அன்பின் மினுமினுப்பு போன்ற திரைப்படங்களுக்கு AJ சங்கர்ஜனும் யாதவின் அன்பின் பாதை திரைப்படத்திற்கு கிஷாந்த் இசையமைத்துள்ளதாகவும் குறித்த திரைப்படங்கள் ஒரு மணத்தியாலமும், முப்பது நிமிடங்களும் காட்சிப்படுத்தப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும், கலை மற்றும் ஆக்கபூர்வப் பணிகளில் ஈடுபடும் இளம் படைப்பாளர்களை ஊக்குவித்து, சமூகத்திற்கு நேர்மையான முன்னுதாரணத்தை உருவாக்கும் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக இத்திரைப்படத்தைப் பார்வையிடுமாறு படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இத் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுக்களை 077 877 4778 / 075 877 4778 (இம்ரான்) எனும் இலக்கங்களை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என வேட்டையன் இம்ரான் தெரிவித்தார்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










