2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10.11.2025) ஆரம்பமாகியுள்ளது .
இப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 3,40,525 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 2,46,521 பாடசாலை பரீட்சார்த்திகளும், 94,004 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர்.
பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக விசேட பேருந்து சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்துள்ளார்.
அத்துடன், பரீட்சைக் காலத்தில் ஏதேனும் அவசர நிலைகளைக் கையாளும் பொருட்டு விசேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடீர் அனர்த்தங்கள் குறித்த தகவல்களை 117 என்ற இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அறிவிக்கலாம். அல்லது பரீட்சைத் திணைக்களத்தை நேரடியாக 1911 என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள தேசிய பரீட்சை அவசர செயல்பாட்டுப் பிரிவு இலக்கங்களான 0113 668 026 அல்லது 0113 668 032 ஊடாக மேலதிக உதவிகளைப் பெறத் தொடர்புகொள்ளலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










