அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்தான்குடியில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் முதற்கட்டம் மூதூர் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமானது 01.12.2025 அன்று இராணுவத்தினரிடம் கையளித்தது.
அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஒட்டமொத்த காத்தான்குடி மக்களின் பங்களிப்பாக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
இதில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி நகர சபை, வர்த்தக சங்கம் உட்பட காத்தான்குடியில் செயற்படும் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்நிவாரணத்திட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் முதற்கட்டமாக மூதூரில் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க தலா 5000.00 ரூபாய் பெறுமதியான பொதிகள் காத்தான்குடி மக்கள் சார்பாக மூதூர் பிரதேச செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டதாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தெரிவித்தார்.
குறித்த நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு போக்குவரத்து தடைகாணப்பட்டதினால் இரானுவத்தினரின் உதவிகளைப் பெற்று அவர்களின் வாகனத்தினூடாக நிவாரணப் பொருட்கள் பாதுகாப்பாக மூதூருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும் இந்நிவாரணத்திட்டத்தினூடாக சேகரிக்கப்பட்ட பொருட்களை 5000 பொதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை மட்டக்களப்பு வாகரை, பொலநறுவை, கண்டி, கம்பளை, பதுளை, மன்னம்பிட்டி, அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி சம்மேளனத்தின் தலைவர் கருத்துத் தெரிவித்தார்.
இவ் முதற்கட்ட நிகழ்வின் போது காத்தான்குடி நகர சபைத் தவிசாளர், காத்தான்குடி பிரதேச செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள், ஜம்இயய்துல் உலமா சபை, வர்த்தக சங்கம், சிவில் அமைப்புக்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










