கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் ஒன்று இன்று (19.01.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டைப் பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், ரூ. 3.2 பில்லியன் செலவில் இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசாவினால் இப் புதிய மேம்பாலம் மக்கள் பாவனைக்காகத் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குறித்த மேம்பாலம் 1990 இல் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, இதற்கான பணிகள் 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்ட இப்பணிகள், கடந்த ஆண்டு மே மாதம் புதிய அரசாங்கத்தினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
320 மீற்றர் நீளமும் 11 மீற்றர் அகலமும் கொண்ட இந்த மேம்பாலம் கோட்டை மற்றும் கொம்பனித்தெரு (Slave Island) இடையிலான போக்குவரத்து நெரிசலை ஓரளவுக்குக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், துறைமுகச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் தாமரைத் தடாகம் (Lotus Roundabout) சுற்றுவட்டப் பகுதியில் நிலவும் நெரிசலைக் குறைக்கவும் இந்த மேம்பாலம் பெரும் உதவியாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டைப் பகுதிக்குச் செல்வோர் தினசரி எதிர்நோக்கும் நேர விரயத்தைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு முக்கிய தீர்வாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா, மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










