இலங்கையின் தெங்கு ஏற்றுமதித் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக, சர்வதேச நிதி நிறுவனம் (IFC) மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து ஒரு மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கை இன்று (28.01.2026) அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்தின் (IFC) தெற்காசிய வலய முகாமையாளர் கிரிகோரி ஸ்மித் ஆகியோருக்கு இடையில் கையெழுத்தானது.
இந்த ஒத்துழைப்பின் மூலம் தெங்குத் தொழில்துறையில் உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் கொள்கை ரீதியான கலந்துரையாடல்கள் மூலம் மதிப்புச் சங்கிலியை (Value chain) மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கை தெங்கு ஏற்றுமதி
பொருளாதார முக்கியத்துவம் மற்றும் வட மாகாண விரிவாக்கம் தெங்குத் தொழில்துறையானது இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
2025 ஆம் ஆண்டில் இந்தத் துறையின் மூலம் 1,233 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இது கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் அந்நிய செலாவணி வருவாயில் முக்கிய பங்காற்றுகிறது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், இலங்கையின் வட மாகாணத்தில் தெங்குப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்கு விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிலையான விவசாய முறைகளை ஒருங்கிணைப்பதற்கும், சமூக ரீதியான பாலின சமத்துவ அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை (gender-based training) முன்னெடுப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பங்குதாரர்கள் தெங்கு விவசாயிகள் மற்றும் மதிப்புச் சங்கிலியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக, தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் (CRI), தெங்கு பயிர்ச்செய்கை சபை (CCB) மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (CDA) ஆகியவற்றுடன் IFC நெருக்கமாக இணைந்து செயற்படும். உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்வதோடு, சர்வதேச தேவையை இலங்கை பூர்த்தி செய்வதை இந்த கூட்டாண்மை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்தின் (IFC) பிராந்திய மேலாளர் கெவோர்க் சர்க்ஸியன் மற்றும் தெங்கு பயிர்ச்செய்கை சபையின் தலைவர் கலாநிதி சுனிமல் ஜயகொடி உள்ளிட்ட அமைச்சின் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










