கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை வலயத்திற்கு உட்பட்ட பெமினிவத்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிடுவதற்காக 09.02.2026 அன்று வருகை தந்தனர்.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கும் ‘Vision’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறித்த பாடசாலைக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்திலுள்ள பழைய பாராளுமன்றக் கட்டிடத்தைப் பார்வையிட்டதன் பின்னர், பாராமளுமன்ற வரலாறு குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அதன் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை குறித்து, பாடசாலையின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவினால் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், பாடசாலை நூலகத்திற்கு புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
அரசாங்கத்தின் பிரதான திட்டங்களில் ஒன்றான ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டம் குறித்தும் இதன் போது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டது.
சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை அடையாளப்படுத்தும் வகையில், பாடசாலைக்கு ஒரு பெறுமதியான மரக்கன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கே.எம்.என். குமாரசிங்கவினால் வழங்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது மாணவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










