மனித நாகரிகத்தின் வளர்ச்சி குறித்த தேடலில், சுமார் 12,000 ஆண்டுகள் பழமையான, விலங்கு தோலினால் ஆன தையல் ஆடைகளின் பாகங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகவும் பழமையான தையல் ஆடையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அமெரிக்காவின் ஒரிகான் (Oregon) மாகாணத்தில் உள்ள கூகர் மவுண்டன் (Cougar Mountain) குகையில் இந்த அரிய வகை தோல் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பான விரிவான ஆய்வு முடிவுகள் ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ (Science Advances) இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
கதிரியக்க கார்பன் பரிசோதனையின்படி, இந்த எல்க் (Elk) மான் தோல் துண்டுகள் 12,060 முதல் 12,620 ஆண்டுகள் பழமையானவை. அதாவது, எகிப்திய பிரமிடுகள் (கி.மு. 2700 – 1700) கட்டப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வட அமெரிக்க பழங்குடியினர் தையல் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததை இது காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தோல் துண்டுகள் விலங்கு தோலால் ஆன கயிறு போன்ற இழைகளால் தையல் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
அகழ்வாராய்ச்சியின் போது எலும்பினால் ஆன ஊசிகளும், விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடுமையான பனி யுகத்தின் (Ice Age) போது உடலின் வெப்பத்தைத் தக்கவைக்க இத்தகைய தையல் ஆடைகள் உதவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இது ஆடையாக உறுதிசெய்யப்பட்டால், பனி யுகத்தைச் சேர்ந்த முதல் தையல் ஆடை என்ற பெருமையை இது பெறும். கடும் குளிரையும், சவாலான சூழலையும் எதிர்கொள்ள பண்டைய மனிதர்கள் கையாண்ட நுட்பமான அறிவுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
இருப்பினும், இவை ஆடையா அல்லது பையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










