இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மின்-கொள்வனவு (e-procurement) தளமான promise.lk இல் பதிவு செய்யுமாறு வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்கு இலவசப் பதிவு மற்றும் ஏல நடைமுறைகள் தொடர்பான இலவசப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொது அறிவித்தலின்படி, தற்போது இந்த இணையத்தளம் ஊடாக “Shopping Method” முறையின் கீழ் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும்.
இதில் உள்ளூர் நிதியின் கீழ் 25 மில்லியன் ரூபாய் வரையிலும், வெளிநாட்டு நிதியின் கீழ் 40 மில்லியன் ரூபாய் வரையிலும் கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும்.
கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பொருட்கள், மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் ஆகிய பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு 1925 என்ற உடனடி அழைப்பிலக்கத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய டிஜிட்டல் கொள்வனவு நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை மிக்க ஏல முறையை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“கடந்த காலங்களில் எரிவாயு, நிலக்கரி, அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் போன்ற பாரிய அளவிலான அரச ஒப்பந்தங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்குள்ளேயே சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், புதிய முறைமையின் கீழ் அமைச்சர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ கொள்வனவு தீர்மானங்களில் தலையிட முடியாது,” என அவர் தெரிவித்தார்.
இந்த சீர்திருத்தமானது வெளிப்படைத்தன்மைக்கான மக்களின் கோரிக்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், முழுமையான டிஜிட்டல் முறைக்கு மாறும்போது தற்காலிகமாக விநியோக சவால்கள் ஏற்படலாம், ஆனால் பழைய முறையைத் தொடர முடியாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










