மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் காந்தி பூங்காவில் இருந்து தனியார் பேருந்து நிலையம் வரை விழிப்புணர்வு நடைபவணி நிகழ்வு ஒன்று 04.03.2026 அன்று நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 4 திகதி உடல் பருமன் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும், உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற ஆபத்துக்களைத் தடுக்கவும், முறையான உணவு மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாதைகள் காட்சிப்படுத்தும் நடைபவணி நடைபெற்றது.
மக்கள் மத்தியில் உடல் பருமனை ஒரு நோயாக கருதி விழிப்புணர்வுகளை கொண்டு சென்று சிகிச்சைகளை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவக மாணவர்களினால் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை தொடர்பான சிந்தனையை துண்டும் விழிப்பூட்டும் வீதி நாடகமும் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார், மாவட்ட தொற்றா நோய் தடுப்பு அதிகாரி வைத்தியர் எம்.ரூதேசன், வைத்தியர்கள், தாதியர் கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










