ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருளை இறக்குவதற்கு இலங்கையிலுள்ள இரண்டு இடங்களும் தற்போது பணிச்சுமை அதிகமாக இருப்பதன் காரணமாகவே, கப்பல்களைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் விளக்கிய கலாநிதி மயூர நெத்திகுமார:

“ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எரிபொருள் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் எரிபொருளை இறக்குவதற்கு பிரதானமாக இரண்டு இடங்களே உள்ளன. எனவே, ரஷ்ய நிறுவனத்திடமிருந்து பெறப்படும் எரிபொருள் கப்பல் அத்தகைய இடத்திற்கு வரக்கூடிய திகதிகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் குறித்தே தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.”

நாட்டின் தற்போதைய எரிபொருள் இருப்பு குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

“நாளை மற்றுமொரு டீசல் கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது. அதில் சுமார் 32,000 மெட்ரிக் தொன் டீசலும், 5,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளும் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல், ஏப்ரல் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் வரவுள்ளன. அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாங்கள் எதிர்பார்த்த அனைத்துக் கப்பல்களும் இலங்கையை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதமும் எதிர்பார்த்த அனைத்துக் கப்பல்களும் நாட்டை வந்தடைந்தன. எனவே, பண்டிகைக் காலம் முடிந்து ஐந்தாம் மாதம் முடியும் வரை இலங்கையில் எரிபொருள் கையிருப்பில் இருக்கும். எனினும், எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects