அண்மையில் தடம் புரண்ட ‘சாகரிக்கா’ புகையிரத இன்று (27.04.2026) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரதம் இன்று (27.04.2026) முதல் வழமைப் போல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அதன் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
கடந்த 24 ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா புகையிரதம் வாதுவை புகையிரத நிலையத்தில் தடம் புரண்டதுடன், அதில் புகையிரதத்தின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தடம் புரண்டிருந்தன.
மேலும், தடம் புரண்ட சாகரிக்கா புகையிரதத்தில் கடமையாற்றிய நான்கு ஊழியர்கள் புகையிரத சேவைக் கடமைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களை புகையிரத சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த புகையிரதத்தின் சாரதி, காப்பாளர் , உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகியோரை இவ்வாறு புகையிரத சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புகையிரத நிர்வாகத்தின் குறைபாடுகளை மூடிமறைப்பதற்காகவே விபத்துக்குள்ளான ‘சாகரிக்கா’ புகையிரதத்தின் சாரதி, காப்பாளர், உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் சுயாதீன தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ள புகையிரதங்களை இயக்குவதிலிருந்து விலகவும், வேகக் கட்டுப்பாடுகளுக்கு அமைய புகையிரதங்களை இயக்கவும் புகையிரத சாரதிகள் சங்கம் தற்போது தீர்மானித்துள்ளதாக அதன் அமைப்பாளர் இந்திக தொடம்கொட சுட்டிக்காட்டுகின்றார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










