நாடெங்கும் வேகமாக பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று, 15.06.2026 அன்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அமைச்சக வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, தற்போதைய டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், வைத்தியசாலை கட்டமைப்பின் தயார்நிலை, நுளம்பு ஒழிப்பு கள வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அதனை எதிர்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த தேசிய ஒழிப்பு வேலைத்திட்டத்திற்காக உள்ளூராட்சி மன்றங்கள், பாதுகாப்புப் படைகள், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சுறுசுறுப்பாகப் பங்களிக்கச் செய்வதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
டெங்கு நோய் வேகமாக பரவி வரும் 14 மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினரை, பொது நிர்வாக அமைச்சின் ஒருங்கிணைப்புடன் உடனடியாக அழைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
15ஆம் திகதி முதல் வரும் 20ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
டெங்கு நோயை முழுமையாக ஒழிப்பதற்காக, சர்வதேச ரீதியிலான வெற்றிகரமான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய வேலைத்திட்டம் மற்றும் திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பொதுமக்களை விழிப்புணர்வூட்டல்: நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு பரந்தளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவசர ஊடக வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை அவசர மற்றும் முன்னுரிமை சேவைகளாகக் கருதி, தொடர்ச்சியாகவும் வேகமாகவும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு வலியுறுத்தியதுடன், அதற்கான பொறுப்புகள் உரிய பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










