அரச துறைகளில் டிஜிட்டல் மாற்றங்கள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முக்கியமான அரச தரவுகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாப்பது முக்கியமான தேவையாக மாறியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு இணையவெளி கட்டளை மையம் (Defence Cyber Command – DCC) அமைப்பினால் வடமேல் மாகாண அரச அதிகாரிகளுக்கான இரு நாள் இணையவெளி பாதுகாப்புப் பயிற்சி வழங்கும் நிகழ்வு 11.06.20206, 12.06.2026 ஆகிய திகதிகளில் வாரியபொலையில் அமைந்துள்ள வடமேல் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி பாதுகாப்பு இணையவெளி கட்டளை மையத்தின் பணிப்பாளர் தலைமையில், இணையவெளி பாதுகாப்பு நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்டது.
வடமேல் மாகாண செயலகத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிற்சியின் நோக்கம், மாகாண நிர்வாக துறைகளின் டிஜிட்டல் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதாகும்.
தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களுடன் சட்ட ரீதியான டிஜிட்டல் பாதுகாப்பு நடைமுறைகளையும் உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி, வளர்ந்து வரும் இணையவழி அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு அவற்றை எதிர்கொள்ள தேவையான அறிவு மற்றும் திறன்களை அரச அதிகாரிகளுக்கு வழங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.
வெறும் கோட்பாட்டு அறிவை விட நடைமுறை அனுபவம் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு, இணையத் தாக்குதல்கள், போலி மின்னஞ்சல் மோசடிகள் (Phishing), சமூக பொறியியல் தாக்குதல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் மென்பொருட்கள் தொடர்பான நேரடி விளக்கங்கள் மற்றும் செயல்முறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
பயிற்சியில் பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டன:
* தேசிய இணையவெளி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்ப அச்சுறுத்தல்கள்.
* இணையவழி குற்றங்கள் மற்றும் அரச துறைகளில் அவற்றின் தாக்கங்கள்.
* இணையவெளி சட்டங்கள், சட்ட கட்டமைப்புகள் மற்றும் நிறுவன பொறுப்புகள்.
* இணையவெளி பாதுகாப்பு சிறந்த நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பயன்பாடு.
* அபாயங்களை குறைத்தல், சம்பவ அறிக்கையிடல் மற்றும் பாதுகாப்பு கொள்கைகள்.
* நேரடி இணையத் தாக்குதல் மாதிரிகள், போலி இணைப்புகள் மற்றும் சமூக பொறியியல் முறைகள்.
* சாதன பாதுகாப்பு, பல கட்ட அங்கீகாரம் (MFA) மற்றும் பாதுகாப்பான அமைப்புகள்.
அதிகரித்து வரும் டிஜிட்டல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், வடமேல் மாகாணத்தில் பாதுகாப்பான மற்றும் வலுவான அரச சேவை கட்டமைப்பை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த பயிற்சி அமைந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் பல்வேறு அரச நிறுவனங்களைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், வடமேல் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் வடமேல் மாகாண செயலகத்தின் பிரதிப் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










