சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் 19.06.2026 அன்று நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கும் ‘Vision’ நிகழ்ச்சித் திட்டத் தொடருக்கு இணையாக, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, இதன்போது தலைமைத்துவம், ஆளுமை விருத்தி மற்றும் பாராளுமன்ற பாரம்பரியங்கள் குறித்து மாணவிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதி நிதியத்தின் வகிபாகம் மற்றும் அதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே இங்கு சுட்டிக்காட்டினார்.
தனது வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தையும் பரீட்சித்துப் பார்ப்பதன் மூலம் வாழ்க்கையின் சவால்களை வெல்ல முடியும் என்றும், ஒரே ஒரு பாடத்திற்குள் சுருக்கிக் கொள்ளாமல், ஒவ்வொரு துறையிலும் சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் புத்தாக்கத் துறையில் வெற்றிபெறும் திறனைப் பாடசாலை வயதிலிருந்தே பழகுவதன் முக்கியத்துவத்தை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய இங்கு சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் பொது மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, இலங்கை பாராளுமன்றத்தின் பணிப்பாளர் (தொடர்பாடல்) சமந்த மல்லவாரச்சி, இலங்கை பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) சிந்தா மதுபாஷினி, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படைகளின் ஒருங்கிணைப்புப் பிரிவின் பணிப்பாளர் எயார் கொமடோர் ஆசிரி காலகே, உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் நதீக தங்கொல்ல, சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் அதிபர் கலாநிதி சுமேதா ஜயவீர, கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் அதிபர் டி. எம். லால் திஸாநாயக்க ஆகியோருடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










