கொழும்பு நகரின் பேருந்து போக்குவரத்துறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ‘பசுமை நகரங்கள், உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி வேலைத்திட்டத்தின்’ (GCIEP) கீழ் பூர்த்தி செய்யப்பட்ட பணிகள், கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியவற்றினால் அதிகாரப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் UNDP இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இப்பணிகள் கையளிக்கப்பட்டன.
இச்சந்திப்பின் போது, பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் தெரசா ஓ’மஹோனி (Theresa O’Mahony) இந்த வேலைத்திட்டத்தின் இறுதி முடிவுகளை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்தார். இதில், கொழும்பு நகருக்குள் மின்சார பேருந்துகளின் (Electric Buses) பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அடங்கிய வீதி வரைபடம் (Roadmap) ஒன்றும் உள்ளடங்கியுள்ளது.
அத்துடன், நாட்டின் பரந்த மின்சார வாகனப் பயன்பாட்டுத் திட்டத்திற்கு (Electric Mobility Agenda) ஆதரவளிப்பதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது UNDP இலங்கை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
இலங்கையின் தேசிய கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, மிகவும் நிலையான, திறமையான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற நகர்ப்புற போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதற்கு இந்தத் திட்டம் பங்களிக்கும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










