எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, இரண்டாவது முறையாக 20.07.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தியின் தலைமையில் கூடிய இந்த விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, எதிர்கால எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியது.
தற்போது உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, எல் நினோ நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 81% ஆக உள்ளது என்றும், அதன்படி சமூக ரீதியாக நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பெருந்தோட்டத் துறை, நீர் முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இதன்படி, எல் நினோ நிலைமையை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு துறைக்கும் உரிய அரச நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால செயல்திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
எல் நினோ நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிப்புக்குள்ளாகும் துறைகளுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, விசேட அமைச்சரவை உபகுழுவின் செயலாளர்/அழைப்பாளர், உத்தியோகத்தர் குழுவின் தலைவர்/ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. ஏ. விமலெந்திரராஜா, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. எல். கே. விஜேமான்னகே ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










