வி. மைக்கல் கொலின் எழுதிய ‘அன்பின் முத்தங்கள்’ எனும் கவிதை நூலின் வெளியீட்டு நிகழ்வு 19-01-2025 அன்று மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவரும் , சைவப் புரவலருமான வி.றஞ்சிதமூர்த்தியின் தலைமையில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
மகுடம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா தாய்வீடு இதழ் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவும் , சிறப்பு விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , ஆகியோரும் , கௌரவ விருந்தினராக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரான கலாமதி பத்மராஜாவும் , விசேட விருந்தினர்களாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியனும் , மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் பிரணவனும் , அழைப்பு விருந்தினராக எழுத்தாளரும் ஆய்வாளருமான திருமலை நவம் உட்பட தமிழ்ச்சங்க உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்விற்கான வரவேற்புரையை தமிழ்ச்சங்க துணைச்செயலாளர் இரா. பிரதீஸ்காந்தும் , தலைமையுரையை சைவப்புரவலர் வி. றஞ்சிதமூர்த்தியும், நூல் வெளியீட்டுரையை தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு. கணேசராஜாவும் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து முதன்மை விருந்தினர் மற்றும் தமிழ்ச்சங்க தலைவர் ஆகியோரால் கவிதை நூல் வெளியிடப்பட்டு நூலின் நயவுரை சுவாமி விபுலாநந்த அழகியற் கற்றகைகள் நிறுவக சிரேஸ்ட விரிவுரையாளர் க. மோகனதாசனினால் ஆற்றப்பட்டது.
நூலின் முதன்மைப் பிரதி தமிழ்ச்சங்கப் பொருளாளர் க. தியாகராஜாவிற்கும், தமிழ்ச்சங்க துணைத்தலைவர் பா. செல்வராஜாவுக்கும் சிறப்புப் பிரதிகள் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ச. ஜெயராஜா, உதவும் கரங்கள் அமைப்பின் பொருளாளர் வைத்தியர் K. கிரிசுதன் , அம்கோர் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ப. முரளிதரன், மற்றும் ஓய்வுநிலை ஆசிரியர் வசந்தி அன்ரனி ஆகியோருக்கும், முதன்மை விருந்தினரால் வழங்கிவைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் விசேட பிரதிகளும் வழங்கப்பட்டன.
இதன்போது அழைப்பு விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முதன்மை விருந்தினர்களின் உரை மற்றும் நூலாசிரியரின் ஏற்புரை என்பனவும் இடம்பெற்றதுடன் இச்சந்தர்ப்பத்தில் முதன்மை விருந்தினர் நூலாசிரியரினாலும் , தமிழ்ச்சங்கப் பிரதிநிதிகளாலும் கௌரவிக்கப்பட்டார்.
நூலாசிரியர் வி. மைக்கல் கொலின் உதவும் கரங்கள் அமைப்பினராலும், தமிழ்ச்சங்க உறுப்பினர்களாலும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
இது மைக்கல் கொலின் வெளியிடும் எட்டாவது நூல் என்பதும் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட நூல்கள் கிழக்கு மாகாண சாகித்திய விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளமையும் இந்நிகழ்விற்கான ஊடக அனுசரணயை மதகு ஊடகம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


























இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










