ஆட்கடத்தல் மற்றும் மனித வியாபாரத்திற்கெதிராக சமூகத்தைப் பலப்படுத்துதல் தொடர்பான பிராந்திய உரையாடல் நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது அம்கோர் தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில், GI-TOC எனப்படும் “எல்லைகளைக் கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய முன்னெடுப்புகள்” அமைப்பின் நிதி அனுசரணையில் 23-01-2025 அன்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன, நியுசிலாந்து நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர் ஸ்தானிகர் கப்ரியல் ஐசாக், GI-TOC அமைப்பின் பிராந்திய இணைப்பாளர் ராதா ப(B)ரோவா, அம்கோர் நிறுவனத்தின் தேசியப் பணிப்பாளர் முரளிதரன், நிதிப் பணிப்பாளர் துமிந்த பெரேரா உட்பட இந்தியா மற்றும் இலங்கையில் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனப் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
அம்கோர் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சிவயோகராஜன் மற்றும் ராதா ப(B)ரோவா ஆகியோர் இணைந்து வழிநடாத்திய இக் கலந்துரையாடலில் எல்லைகளைக் கடந்து நடைபெறும் ஆட்கடத்தல் மற்றும் மனித வியாபாரம் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உத்திகள், வழிமுறைகள், அரசாங்க கொள்கைத் திருத்தங்கள், பரிந்துரைகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்பு போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப் பட்டதுடன் அவை ஆவணப்படுத்தப்பட்டன.
இதில் கலந்துகொண்ட இலங்கையின் 25 மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் கோவா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் நியுசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் பல்வேறு ஆக்கபூர்வமான விடயங்களை பகிர்ந்து கொண்டதுடன், எதிர்காலத்தில் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினர்.
பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கவும், ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனையைத் தடுக்கவும் இலங்கையில் பல மாவட்டங்களில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அரசாங்கத்துடன் இணைந்து அம்கோர் நிறுவனம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










