2025 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்துக்கு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள நிதிக்கு வடக்கு மாகாணத்தால் முன்மொழியப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான மீளாய்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
ஒவ்வொரு அமைச்சுக்கள் அதன் கீழான திணைக்களங்களுக்கு ஒதுக்கப்படவுள்ள நிதி விவரங்கள் மற்றும் அந்த நிதியில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகத்தின் திட்டமிடல் – பணிப்பாளர் கே.சிவசந்திரன் தெரியப்படுத்தினார்.
முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஒக்ரோபர் மாதத்துக்குள் நிறைவேற்றி முடிக்கவேண்டியது அந்தத் திணைக்களத் தலைவர்களின் பொறுப்பு என ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் சில திட்டங்கள் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி முன்மொழியப்பட்டிருந்த நிலையில், அதை மீளாய்வு செய்து, வன்னிப் பிராந்தியத்துக்கு மாற்றுமாறும் ஆளுநர் யோசனை முன்வைத்தார். குறிப்பாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் யாழ்ப்பாணத்தில் சில வீதிகளை தரமுயர்த்தும் செயற்றிட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அதைவிடுத்து வன்னியிலுள்ள விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்குமாறும் பணித்தார்.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி எஸ்.குகதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










