பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஹைபோகால்சீமியா எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை…
இன்றைய திகதியில் திருமணமான தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறப்பு என்பது அவர்களின் எதிர்பார்ப்பை விட சவால் மிக்கதாக இருக்கிறது. இருப்பினும் சுகாதாரத்துறை பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் உடனடியாகவும், துல்லியமாகவும் கண்டறிந்து சிகிச்சை அளித்து முழுமையான நிவாரணத்தை வழங்கி வருகிறது.
பிறக்கும் பச்சிளம் குழந்தைகளில் சிலருக்கு ஹைபோகால்சீமியா எனும் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உண்டு. இதற்கு தற்போது நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பெண்மணி ஒருவர் கருத்தரித்து இருக்கும் காலங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டாலும், ஹைப்பர்பாரா தைரொய்டிசம் எனும் பாதிப்பு ஏற்பட்டாலும், மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஹைபோகால்சீவியா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும்.
பெரும்பாலும் பிறந்த இரண்டு நாட்களுக்குள் குழந்தைகளுக்கு குருதியில் கால்சிய சத்தின் அளவு குறித்த பரிசோதனையை மேற்கொள்வார்கள். இதில் ஏதேனும் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டிருந்தால் குழந்தைகளுக்கு சில வினாடிகள் நடுக்கம் ஏற்படலாம் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம் அல்லது தாய்ப்பால் அருந்துவதில் தடை ஏற்படலாம்.
இத்தகைய அறிகுறிகள் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் வைத்தியர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அந்த குழந்தையை அனுமதித்து சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
குழந்தையின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் , அவர்களுடைய எலும்பின் வலிமை சீராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இதற்கு உடனடியாக நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலம் நிவாரணத்தை வழங்குவார்கள். சில தருணங்களில் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலமாகவே இத்தகைய பாதிப்பை குறைக்க இயலும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வைத்தியர் பிரகாஷ்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…