தூய சக்தி மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான அதுநுட்ப ‘நனோ’ திரவியங்கள் மற்றும் தொழில்நுட்ப சர்வதேச மாநாடு – 2025

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் வட மாகாணத்தின் வளர்ச்சி தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். அதற்கான சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதில் கல்வித்துறை, தொழில்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்த சர்வதேச மாநாடு ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய தளமாக அமையும் என்றும் வாழ்த்தினார்.

தூய சக்தி மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான அதிநுட்ப ‘நனோ’ (நுண்ணணு தொழில்நுட்பம்) திரவியங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு – 2025 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமானது.

நோர்வே நாட்டு உயர்கல்வி, ஆற்றல் அபிவிருத்தி இயக்குனரகத்தின் உதவியுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தாலும், இந்திய கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனத்தினாலும், மேற்கு நோர்வே பல்கலைக் கழகத்தாலும் இம்மாநாடு கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு மாநாட்டின் ஆரம்ப உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

வட மாகாணம் கடந்த காலங்களில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு மீண்டும் வளர்ச்சிக்கான பாதையில் பயணிக்கிறது. எனினும், தூய்மை ஆற்றல் மற்றும் சுகாதாரம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இன்னும் பல முன்னேற்றங்கள் தேவை.

நம்பகமான மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்காமையால் பொருளாதார வளர்ச்சிக்கு அது தடையாக உள்ளது. கிராமப்புற சமூகங்கள் பெரும்பாலும் மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. இது கைத்தொழில், விவசாயம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை பாதிக்கிறது.

சூரிய சக்தி, காற்றாலை மற்றும் உயிரி ஆற்றல் உள்ளிட்ட இயற்கை எரிசக்தி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் தீர்வுகளின் முன்னேற்றம், மேற்படி சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக பயணிப்பதற்கு உதவும்.

மின்சாரத்திற்கு மேலதிகமாக அவசியம் கவனம் செலுத்தப்பட வேண்டிய துறையாக சுகாதாரப் பராமரிப்பு உள்ளது. நவீன மருத்துவ வசதிகள், மலிவு விலையில் நோயறிதல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார உட்கட்டமைப்பு ஆகியவற்றின் தேவை மிக முக்கியமானது. மருத்துவ சாதனங்கள் மற்றும் சாதனங்களில் மேம்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், சுகாதாரப் பராமரிப்பு அணுகலில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கலாம். எமது மாகாணத்தில் பல்வேறு குறைபாடுகளுடன் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும்.

மேலும், வடக்கு மாகாணம் இயற்கையான எரிசக்தி மற்றும் சுகாதார தொழில்நுட்பங்களின் மையமாக இருப்பதற்கான வாய்ப்புக்களைக் கொண்டுள்ளது எனவும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த குமார, மேற்கு நோர்வே பல்கலைக் கழகத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜென்ஸ் கிறிஸ்ரைன், இந்தியாவின் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி கணேசன், வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஏ.அற்புதராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects