நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் க்ளீன் ஸ்ரீலங்கா செயலகம் இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் நோய் பரவாமல் தடுத்தல், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்தோடு, இதற்கு இணையாக இந்நாட்டில் உள்ள 10,096 பாடசாலைகளும் உள்ளடங்கும் வகையில் ஓவியம் வரைதல், சுவரொட்டி கண்காட்சி, நாடக மற்றும் இசை கலாச்சார நிகழ்ச்சிகள், தெளிவுப்படுத்தல் சொற்பொழிவு உள்ளிட்ட செயற்பாடுகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்கு சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், காவல்துறை, முப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரது ஆதரவைப் பெறுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில், எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டத்தினை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களிலும் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
“Clean Sri Lanka Day” என்று பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடுகள் குறித்து உயர் கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர செனவிரத்ன தலைமையில் 24.06.2025 அன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ, மேலதிகச் செயலாளர் உதார திக்கும்புர , உதவி கல்விப் பணிப்பாளர் (பிரிவெனா) சங்கைக்குரிய கொஹேல்வல விபஸ்ஸீ தேரர், க்ளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் பணிப்பாளர் (சமூக) கபில செனரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










