வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் இன்று (04.07.2025) முதல் 0.55% வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
2025, ஜூலை முதலாம் திகதி முதல், பேருந்து கட்டணம் 2.5 சதவீதம் குறைக்கப்படும் என, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்த போதிலும், கடந்த முதலாம் திகதி அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய, டீசல் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில் இக் கட்டணக்குறைப்பு ஏற்றப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், புதிய கட்டண திருத்தத்தின் கீழ், குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 27 ரூபாய், இரண்டாவது கட்டண நிலையான 35 ரூபாய், மற்றும் மூன்றாவது கட்டண நிலையான 45 ரூபாய் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நான்காவது கட்டண நிலையிலிருந்து பேருந்து கட்டணங்கள் மாற்றப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார்.
அதன்படி, 56, 77, 87, 117, 136 மற்றும் 141 ரூபாய் உள்ளடங்கிய சில கட்டண நிலைகள் ஒரு ரூபாயால் குறைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர, மற்ற அனைத்து கட்டண நிலைகளும் 2 ரூபாய் மற்றும் 3 ரூபாய் அளவில் குறைக்கப்படும். இதற்கிடையில், பேருந்து கட்டண திருத்தங்களை அனைத்து பேருந்துகளிலும் காட்சிப்படுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், புதிய திருத்தங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படாவிட்டால், 1955 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










