மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அமைந்துள்ள சந்தி, வெளியூர் பயணிகளின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழ்கிறது.
இச் சந்தியை நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். நீண்ட தூரப் பயணங்களால் களைப்புடன் வரும் இவர்களின் தாகத்தைத் தணிக்கும் உயரிய நோக்கத்துடன் பணிமனையின் நுழைவாயில் அருகே சுத்தமான குடிநீர் வசதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
26.07.2025 அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். ஆர். முரளீஸ்வரனின் தலைமையில் வைத்தியர்.கே. முருகானந்ததினால் இப்புதிய குடிநீர் வசதியானது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த மனிதநேயமிக்க முன்முயற்சியானது ஓய்வுபெற்ற மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். கே.முருகானந்தம் தனது பெற்றோர் நினைவாக வழங்கிய நன்கொடையின் மூலம் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் வைத்தியர் கே.முருகானந்ததின் குடும்ப உறுப்பினர்கள் உட்படப் பிராந்திய வைத்திய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இப் பணி, மக்களின் நலனில் அக்கறை கொண்டு மேற்கொள்ளப்படும் ஓர் அரிய சேவையாகும். இதன் மூலம், தாகத்துடன் வரும் வெளியூர் பயணிகள் புத்துணர்ச்சி பெறுவார்கள் எனப் பணிமனை நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










