கழுத்து நரம்பு அழுத்த பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை….
எம்மில் சிலர் தங்களது வீட்டில் உள்ள மின்விசிறியை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் போது கழுத்தை திடீரென்று உயர்த்துவார்கள். அந்த தருணத்தில் கழுத்து நரம்பு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு, அதன் காரணமாக கை, கால்கள் மரத்துப் போகும்.
இத்தகைய பாதிப்பை மருத்துவ மொழியில் செர்விகல் மைலோபதி என குறிப்பிடுவார்கள். இதற்கு பரிசோதனைகளின் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்த பிறகு சத்திர சிகிச்சை மூலமாகவும், சத்திர சிகிச்சையற்ற சிகிச்சை மூலமாகவும் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்
செர்விகல் மைலோபதி என்றால் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளில் ஏற்படும் அழுத்த பாதிப்பு என குறிப்பிடலாம். கழுத்து தண்டுவட பகுதியின் முதன்மையான பணி என்னவென்றால் மூளையில் இருந்து அனுப்பப்படும் சமிங்ஞைகளை கை, கால் ஆகிய பகுதிகளுக்கு கடத்துவது தான் இதன் பணி.
இந்த கழுத்துப் பகுதியில் உள்ள நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது அழுத்தம் ஏற்பட்டாலோ கை மற்றும் கால் பகுதிக்கு மூளையிலிருந்து முறையான சமிங்ஞைகள் கிடைக்காது. இதன் காரணமாக கை, கால் பகுதி மரத்துப் போகக்கூடும். சிலருக்கு பலவீனமடையும்.
வேறு சிலருக்கு வீக்கம் ஏற்படும். பொருள்களை கைகளால் உறுதியாக பற்ற இயலாது. கைகளையும், கால்களையும் முறையாக பாவிக்க இயலாது. குறிப்பாக கைசாத்திடும் போதும் நடை பயிற்சியின் போதும் அசௌகரியங்கள் மேலோங்கும்.
இத்தகைய அறிகுறிகள் இருந்தால் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று நரம்பியல் மற்றும் தண்டுவட சிகிச்சை நிபுணரை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எம் ஆர் ஐ.. சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். அதனைத் தொடர்ந்து பாதிப்பினை பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் இயன்முறை சிகிச்சை மூலமாக நிவாரணம் அளிக்க இயலுமா? அல்லது சத்திர சிகிச்சைகளின் மூலமாகத்தான் நிவாரணம் வழங்க இயலுமா? என்பதை உறுதிப்படுத்துவர்.
இந்தத் தருணத்தில் பரிசோதனைகள் மூலம் அவதானிக்கப்பட்ட பாதிப்புகள் தீவிரமடைந்தால் அதாவது நான்கு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் தீவிரமடைந்தால் அவர்களுக்கு சத்திர சிகிச்சை மூலமாகத்தான் நிவாரணத்தை வழங்க இயலும்.
ஆனால் சிலருக்கு கழுத்து நரம்பு பகுதியில் அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என பரிசோதனையில் தெரிய வந்தாலும் நோயாளிக்கு அதனால் பாரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றால் இதற்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மூலமாகவே நிவாரணம் அளிப்பர்.
வைத்தியர் விஜயராகவன்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










