நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க, பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன், நட்புறவுச் சங்கத்தை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான கூட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தின்போதே இத் தெரிவு இடம்பெற்றது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வர்த்தகம், கல்வி, பாதுகாப்பு மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்து எடுத்துரைத்தார். இலங்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த நட்புறவுச் சங்கத்தின் மீள் ஸ்தாபிப்பு இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்தும் என்றார்.
பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ், புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பாகிஸ்தான் உறுதியுடன் இருப்பதாகவும், குறிப்பாக மத மற்றும் கலாசார சுற்றுலாத் துறையை விரிவுபடுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், நட்புறவு சங்க உறுப்பினர்களை பாகிஸ்தானுக்கு வருகை தருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் அனுர கருணாதிலக்க, தன்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்க இந்தச் சங்கம் ஒரு அர்த்தமுள்ள தளமாகச் செயல்படும் என்று அவர் கூறினார்.
புதிய செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக், சபாநாயகர், உயர் ஸ்தானிகர் மற்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன், இந்தச் சங்கத்தின் நோக்கங்களை அடைய அனைத்து உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றத் தான் தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.
இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், சபாநாயகரைச் சந்தித்து இருதரப்பு முதலீடு, வர்த்தகம், சுற்றுலா மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










