கல்விச் சீர்திருத்தம் குறித்த உபகுழுக் கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தம் பற்றிய உபகுழு சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திறக்கப்படுவதாக பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

அத்துடன், கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை குழுவில் கலந்துரையாடப்பட்ட பின்னர் பொது மக்களுக்கு அது தொடர்பில் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கல்விச் சீர்திருத்தம் குறித்த உபகுழு முதல் தடவையாக பிரதமர் தலைமையில் 05.08.2025 அன்று கூடியபோதே இக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

2026ஆம் ஆண்டில் தரம் ஒன்று மற்றும் தரம் ஆறு ஆகிய வகுப்புக்களுக்குப் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் பணிகள் இக்காலப் பகுதியில் விரைவில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு சரியான புரிதலை வழங்குவதன் அவசியம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்தை ஈர்த்தனர். இதற்கு பதிலளித்த பிரதமர் இது தொடர்பில் விழிப்புணர்வுத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவிருப்பதாகக் குறிப்பிட்டார். எட்டு மாகாணங்களின் கல்வி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள ஊவா மாகாணத்திற்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயிற்சித் திட்டங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமித்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. மேலும் பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் செயலாளர் விளக்கமொன்றையும் வழங்கினார்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாளக கலுவெவ, பணியாட் தொகுதியின் பிரதானியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பாராளுமன்ற சட்டவாக்கச் சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects