ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் சுப்மன் கில் வென்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர் குறித்த விருதைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
குறித்த டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 3 சதங்கள், 1 இரட்டைச்சதம் அடங்கலாக 754 ஓட்டங்களைக் குவித்தார்.
இந் நிலையில் ஜூலை மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரராகப் பெயரிடப்பட்டமை மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக” சுப்மன் கில் கூறியுள்ளார்.
அத்தோடு, ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதுக்காக சுப்மன் கில்லுடன் சேர்த்து, இங்கிலாந்து அணியின் பென் ஸ்டொக்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் வியான் முல்டர் ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்து மகளிர் அணியின் சோபியா டங்க்லி வென்றுள்ளார்.
குறித்த விருதுக்கான பரிந்துரையில் இங்கிலாந்து மகளிர் அணியின் சோபியா டங்க்லி மற்றும் சோஃபி எக்லெஸ்டோன், அயர்லாந்து அணியின் கேபி லூயிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இந்திய அணிக்கெதிரான தொடரின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர் குறித்த விருதை வென்றுள்ளார்.
அவர் குறித்த விருதைப் பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









