முன்பக்க மார்பெலும்பு அமைப்பில் ஏற்படும் குறைபாட்டை களைவதற்கான நவீன சிகிச்சை…
எம்முடைய இல்லங்களில் உற்சாகத்துடன் வலம் வரும் இளைய தலைமுறையினர் மற்றும் வளரிளம் பருவத்தை சார்ந்தவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அவர்களுடைய சுவாசத்தில் மாற்றம் ஏற்பட்டால்…
அதனை உடனடியாக துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இது பெக்டஸ் எக்ஸ்குவாட்டம் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் முன்பக்க மார்பக எலும்புகளின் அமைப்பில் ஏற்பட்ட குறைபாடாகும். இதன் காரணமாக உங்களுடைய இதயமும், நுரையீரலும் இயல்பான அளவை விட கூடுதலான அழுத்தத்தை சந்திக்கிறது. அதன் விளைவாகத்தான் உங்களுடைய சுவாசத்தில் மாற்றம் ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
இயல்பான லயத்தை விட அதிகமாக துடிக்கும் இதயத்துடிப்பு, மார்பக வலி, மூச்சு திணறல், அதீத சோர்வு, உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது வித்தியாசமான ஒலியுடன் சுவாசித்தல், மயக்கம், தலை சுற்றல், சுவாசப் குழாயின் மேல் பகுதியில் அடிக்கடி தொற்று பாதிப்புகள், மார்பக அமைப்பு குறித்த உளவியல் ரீதியான அழுத்தம்… ஆகிய அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய மார்பக குறிப்பாக முன்பக்க மார்பு எலும்புகளின் அமைப்பில் குறைபாடு இருப்பதாக பொருள் கொள்ளலாம்.
பெரும்பாலும் இது போன்ற தருணங்களில் நோயாளிகளுக்கு தங்களுடைய மார்பின் முன்பக்க பகுதியில் லேசாக பள்ளம் ஏற்பட்டு இருப்பது போன்ற உணர்வு எழும். சிலருக்கு இத்தகைய பாதிப்பின் காரணமாக மூச்சு திணறல், மார்பு வலி பாதிப்பு அடிக்கடி ஏற்படக்கூடும். அதிலும் வளரிளம் பருவத்தை சார்ந்தவர்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது.
இதற்கான காரணம் துல்லியமாக ஆராயப்படவில்லை என்றாலும், சில வைத்திய நிபுணர்கள் மார்பக எலும்புகளை விலா எலும்புகளுடன் இணைக்கும் குருத்தலும்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது அந்த குருத்தெலும்பு பிறக்கும் போதிலிருந்தே சீரான முறையில் அமையாமல் குறைபாடுடன் இருக்கலாம் என்று விளக்குகிறார்கள்.
இத்தகைய பாதிப்பு தொடக்க நிலையில் இருக்கும் போது துல்லியமாக அவதானித்து முறையாக ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். அதனை தவறினால் உங்களுடைய இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டு முக்கிய உறுப்பின் செயல் திறனில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்கும்.
இதன் போது மார்பக எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எலக்ட்ரோகார்டியோகிராம், எக்கோகார்டியோகிராம், நுரையீரல் செயல்பாட்டு திறன் பரிசோதனை, உடற்பயிற்சி சோதனை.. ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து சத்திர சிகிச்சை மூலம் இதற்கான முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். இத்தகைய சத்திர சிகிச்சையின் போது இரண்டு வகையினதான தொழில்நுட்பங்களை பாவித்து நிவாரணத்தை வழங்குவார்கள். இதனைத் தொடர்ந்து பிசிகல் தெரபி எனும் சிகிச்சையையும் மேற்கொண்டு நிவாரணம் அளிப்பார்கள்.
வைத்தியர் சந்திரசேகரன்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










