2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிதியியல் அறிவு மாதமாக இலங்கை மத்திய வங்கி பிரகடனப்படுத்தியுள்ளது.
இதற்கு அமைவாக, “நிதியியல் ரீதியாக அறிவுமிக்கதொரு இலங்கை” என்ற தொனிப்பொருளில், இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கருப்பையா பிரபாகரன் தலைமையில், இலவச நிதி அறிவுக் கண்காட்சி 22.10.2025 அன்று திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம்.ஹேமந்த குமார பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
இந்த கண்காட்சியில், வங்கிச்சேவைகள், கொடுகடன் தகவல் பணியகம், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை – முதலீட்டு வழிகாட்டல்கள், ஊழியர் நம்பிக்கை நிதிய சேவைகள், ஊழியர் சேமலாப நிதியச் சேவைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி வழிகாட்டல்கள், நாணய அரும்பொருட்காட்சியகம், தொழில் முயற்சியாளர் சந்தை, உள்ளூர் உற்பத்திக் காட்சிக் கூடங்கள் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களால், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிதி சேவைகள் தொடர்பான விளக்கங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
மத்திய வங்கியின் பிராந்திய அபிவிருத்தி பிரிவுப் பணிப்பாளர் சத்குரு ஆரியதாச சிறப்பு உரையாற்றினார். நடைபெற்ற கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் பல நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










