நாட்டில் இடம்பெயர்ந்த சுமார் மூன்று மில்லியன் மக்களில் சுமார் 40.6 சதவீதம் பேர் திருமணத்தின் காரணமாக வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு (16.7%) மற்றும் கம்பஹா (16.8%) மாவட்டங்களுக்கே அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சமீபத்திய குடிசன மதிப்பீட்டில், மொத்தமாக இடம்பெயர்ந்த சனத்தொகை 3,167,263 ஆக உள்ளது என்றும், அவர்களில் 40.6 சதவீதம் பேர் (1,285,909) பிரதானமாக திருமணக் காரணங்களுக்காகவே இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அல்லது வேலை தேடல் 17.1%, குடும்பத் தேவைகள் 16.2%, நிரந்தர வதிவிடத்திற்குத் திரும்புதல் 11.3%, கல்விக்காக இடம்பெயர்தல் 6.5%, இடப்பெயர்வுக்குப் பிறகு மீள்குடியேற்றம் 3.3% போன்ற காரணங்களும் இடப்பெயர்வில் தாக்கம் செலுத்தியுள்ளனர்.
குறைந்தளவானோர் இடர்கள் (1.6%), அபிவிருத்தித் திட்டங்கள் (1.3%) மற்றும் மத நோக்கங்களுக்காகவும் (2.1%) இடம்பெயர்ந்துள்ளனர்.
வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் மேலும் எட்டு மாகாணங்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமான குடியேற்றவாசிகள் திருமணமே காரணம் எனக் கூறியுள்ளனர்.
கொழும்பில் (37.5%) மற்றும் கம்பஹாவில் (26.1%) வேலைவாய்ப்பை நோக்கிய இடம்பெயர்வு மிக அதிகமாக உள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் (22.6%) குடும்பத் தேவைகளுக்காக இடம்பெயர்ந்தவர்களின் விகிதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் குடும்பத் தேவைகளுக்காக இடம்பெயர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் (தலா 19.6%) பதிவாகியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிரந்தர வதிவிடத்திற்குத் திரும்புபவர்களின் சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளது (25.4%). கல்வி தொடர்பான இடம்பெயர்வு மட்டக்களப்பு (25.3%), கொழும்பு (11.8%) மற்றும் கண்டி (10.6%) ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக உள்ளது.
வட மாகாணத்தில், இடம்பெயர்வுக்குப் பிந்தைய மீள்குடியேற்றமே கிளிநொச்சி (49.0%), மன்னார் (45.5%) மற்றும் யாழ்ப்பாணம் (40.8%) ஆகிய இடங்களில் இடம்பெயர்வுக்கு முக்கிய காரணியாக இருந்தது.
இயற்கை இடர்கள் வவுனியா (16.5%) மற்றும் முல்லைத்தீவில் (11.7%) இடம்பெயர்வைத் தூண்டின, அதேவேளை அபிவிருத்தித் திட்டங்கள் அம்பாறை (13.3%) மற்றும் பொலன்னறுவை (11.8%) ஆகிய இடங்களில் இடம்பெயர்வைத் தீர்மானித்தன.
இந்தத் தரவுகள் திருமணமே குடியேற்றத்திற்கான பிரதான காரணியாக இருப்பதோடு, வேலை, குடும்பத் தேவைகள், கல்வி மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவை இலங்கையின் மாவட்டங்கள் முழுவதிலும் இடம்பெயர்வு வடிவங்களைத் தீர்மானிக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










