செயலிழந்த 156 நீர் வழங்கல் திட்டங்களில் 146 திட்டங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், மீதமுள்ள 10 திட்டங்களை சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
நாடு முழுவதும் இயங்கும் 342 நீர் வழங்கல் திட்டங்களில், அனைத்து மாவட்டங்களையும் பாதிக்கும் வகையில் செயலிழந்த 156 திட்டங்களில், 17 திட்டங்கள் சீரற்ற வானிலை காரணமாக முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், மிகவும் கடினமாக மீளமைக்கப்பட வேண்டிய இந்த சிக்கலான நீர் வழங்கல் திட்டங்களை சில நாட்களுக்குள் வழமைக்கு கொண்டுவருவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு பாதுகாப்புப் படையினர், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை மின்சார சபை வழங்கிய ஒத்துழைப்பை அவர் பாராட்டினார்.
அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்ட மத்திய மாகாணம் உட்பட நாடு முழுவதும் நீர் வழங்கல் திட்டங்களுக்கு ஏற்பட்ட சேதம் 5 பில்லியன் ரூபாயைத் தாண்டும் என ஊகிக்கப்படுவதாக, இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு வாரத்திற்குள் அனைத்து நீர் வழங்கல் திட்டங்களும் வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










