‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் மற்றும் அதன்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரைாயாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களின் பங்கேற்புடன் 20.12.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வழங்கும் 50,000 ரூபா ஆகிய உதவித்தொகைகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், வீடுகள் மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குதல், நாடு பூராகவும் பராமரிக்கப்படும் பாதுகாப்பு மையங்களின் செயல்பாடுகள்,மக்களை மீளக் குடியமர்த்தல்,வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் ஆகியவை இங்கு விரிவாக ஆராயப்பட்டன.
இழப்பீடு வழங்கும் செயல்பாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தப் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கவும் எவரையும் கைவிடாத வகையில் இழப்பீடு பெற உரிமை உள்ள அனைவருக்கும் அதனை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், மக்களை மீள்குடியேற்றுவது மற்றும் அதற்குத் தேவையான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், பிரதான மாவட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் தனியான திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் இது தொடர்பாக மீண்டும் கலந்துரையாடல் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வீட்டு சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும்போது அத்தகைய நடவடிக்கைகளை நியாயமானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.
பெரும் போகத்திற்கு விவசாயிகளை தயார்படுத்துவதற்காக நீர்ப்பாசன கட்டமைப்புகளின் புனரமைப்பு, இழப்பீடு மற்றும் விதை நெல் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கான வேலைத் திட்டங்களின் செயல்பாட்டையும் இதன்போது ஜனாதிபதி கேட்டறிந்தார்.
மேலும், சேதமடைந்த கால்நடை பண்ணைகளுக்கு இழப்பீடு வழங்கி, அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குதல், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறு வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிக்க உதவுதல், மீன்பிடித் தொழிலை மீட்டெடுப்பது மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் வழங்கும் 15,000 ரூபா உதவித்தொகையை உடனடியாக வழங்கி நிறைவு செய்தல் போன்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையா்ப்பட்டது.
சேதமடைந்த கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குமுது லால் போகஹவத்த, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில பெரேரா, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான கபில ஜனக பண்டார, ரோஷன் கமகே, ரஸல் அபோன்சு, மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், புகையிரதத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)












![]()










