மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையமானது ஹிஜ்ரா நகர், தியாவெட்டுவான் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் தலைமையில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் பணிப்பாளர் நாயகம் கே.கே.எஸ்.கொத்தலாவல பங்கு பற்றுதலுடன் போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் ஏற்பாட்டில் 19.01.2026 அன்று திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் போதைப்பொருள் பாவனையினால் பாதிப்புக்குள்ளாகிய நபர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு வழங்குவதற்கான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
“நீங்கள் தனியாக இல்லை – நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” இங்கே மாற்றம் உருவாகிறது” எனும் கொள்கையின் கீழ் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையம் செயற்படவுள்ளது.
போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவதன் மூலம் சிறந்த பிரஜைகளை உருவாக்க முடியும் என இதன் போது அதிதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹீர், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசாமில், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வெளிக்கள உதவி பணிப்பாளர் நிலானி அலுத்கே, வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம்.ரசாட், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் 1927 எனும் இலக்கத்திற்கு போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










