கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றுத் தரம் பெரும்பாலும் மிதமான நிலைகளில் காணப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் அது மேலும் பாதிக்கப்படக்கூடும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
27.01.2026 அன்று வெளியிடப்பட்ட சுற்றுப்புற காற்றுத் தர அறிக்கையில்,
பெரும்பாலான நகர்ப்புறங்களில் PM2.5 எனப்படும் நுண்ணிய தூசி துகள்களின் அளவு மிதமான நிலையில் இருந்ததாக NBRO குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றுத் தரம் நல்ல நிலையாக பதிவாகியுள்ளது.
எனினும், அடுத்த 24 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட பல நகரங்களில் காற்றுத் தரம் மிதமானது முதல் சற்றே ஆரோக்கியமற்ற நிலை வரை மாறக்கூடும் என NBRO எச்சரித்துள்ளது.
மேலும், வடக்கு பிரதேசத்திலிருந்து எல்லைத் தாண்டி வீசக்கூடிய மாசடைந்த காற்றோட்டம் காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பொதுமக்கள் இயன்றவரை முகக்கவசம் அணியுமாறும், மூச்சுத் திணறல் போன்ற சுவாச சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










