78 ஆவது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று (30.01.2026) முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட ஒத்திகை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால், அப்பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் நேரங்கள்:
ஜனவரி 30, 31 மற்றும் பெப்ரவரி 02: (ஒத்திகை நாட்கள்) காலை 07.45 முதல் பிற்பகல் 01.30 வரை.
பெப்ரவரி 01: (முழுமையான ஒத்திகை நாள்) அதிகாலை 05.00 மணி முதல் பிற்பகல் 01.30 வரை.
பெப்ரவரி 04: (சுதந்திர தினம்) அதிகாலை 05.00 மணி முதல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை
அத்தோடு, ஒத்திகை மற்றும் சுதந்திர தினத்தின் போது பின்வரும் பாதைகளில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படவோ அல்லது மட்டுப்படுத்தப்படவோ கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
சுதந்திர சதுக்க சுற்றுவட்டாரத்திலிருந்து சுதந்திர சதுக்கம் நோக்கிய பகுதி.
ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து பதனம நிறுவனம் நோக்கிய பாதை.
பௌத்தாலோக மாவத்தை, டொரிங்டன் சந்தியிலிருந்து பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தை நோக்கிய பகுதி.
விஜேராம மாவத்தை மற்றும் வித்யா மாவத்தை சந்தியிலிருந்து வித்யா மாவத்தை நோக்கிய வீதி.
ஹோர்டன் பிளேஸ், மெய்ட்லண்ட் கிரசன்ட் சந்தி ஊடாக சுதந்திர சதுக்க சுற்றுவட்டாரம் நோக்கிய பகுதி.
மேலும், பெப்ரவரி 04 ஆம் திகதி அதிகாலை 03 மணி முதல் சுதந்திர தின நிகழ்வின் போது ஹோர்டன் சுற்றுவட்டாரம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, தர்மபால மாவத்தை, கண்ணங்கர மாவத்தை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்குறிப்பிட்ட தினங்களில் கொழும்புக்குள் பயணிப்போர் இந்த போக்குவரத்து மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










