2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சம் (500,000) எனும் எல்லையைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 505,751 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான 22 நாட்களில் மாத்திரம் 228,424 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி மாதத்தின் முதல் மூன்று வாரங்களிலும் வாராந்தம் 70,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளமை ஒரு விசேட அம்சமாகும்.
அதன்படி, முதல் வாரம்: 70,355 பேர், இரண்டாம் வாரம்: 77,870 பேர் மற்றும் மூன்றாம் வாரம்: 71,101 பேர் வருகை தந்துள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களே அதிகம் என குறிப்பிடப்படுகிறது.
நாடுகளின் அடிப்படையில் இந்தியா: 89,277 பேர், ஐக்கிய இராச்சியம்: 55,407 பேர், ரஷ்யா: 45,351 பேர், ஜேர்மனி: 35,413 பேர் மற்றும் சீனா: 31,621 பேர் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், இவர்களுக்கு மேலதிகமாக பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










