விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையினால், கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணிபுரியும் கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக மூழ்காளர் சங்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்றொழிலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த விசேட திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
கடற்றொழில் சார்ந்த மூழ்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் போது மரணம் சம்பவித்தால், காப்பீடு செய்தவருக்கு 12 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்கப்படும்.
கடல் அல்லது நன்னீர் நிலைகளில் மூழ்கிப் பணியாற்றும் போது ஏற்படும் விபத்துக்களால் தற்காலிகமாகச் செயலிழப்பவர்கள் அல்லது அங்கவீனமடைபவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
ஒரு வருடத்திற்கான இந்த காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள கடற்றொழிலாளர் ஒருவர் வருடாந்தம் 1,920 ரூபா மாத்திரமே செலுத்த வேண்டும்.
பாதுகாப்புத் தேவையைப் பொறுத்து 12 இலட்சம் மற்றும் 15 இலட்சம் ரூபா வரையான காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, உயிருக்கு அதிக ஆபத்துள்ள தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், அவர்களது இடர்களை முகாமைத்துவம் செய்வதற்கும் இந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காப்பீட்டுத் திட்டமானது ஆழ்கடல் கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










