சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கலை மற்றும் சமூகப் பணிகளில் நீண்டகாலமாகத் தடம் பதித்து வரும் புதிய அலை கலை வட்டம், தனது 46 ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள நிலையில், அதன் மகளிர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘வீர வனிதையர் விருது 2026′ வழங்கும் விழாவின் இரண்டாம் கட்டம் 07.03.2026 அன்று கொழும்பில் நடைபெற்றது.
இவ்விருது வழங்கல் நிகழ்வில் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மட்/அல் அமீன் வித்தியாலயத்தில் தரம் 06 இல் கல்வி கற்கும் மாணவி செல்வி மரின் தமீம் கலை ஆற்றுகைக்காகவும் பத்து வயதில் தொட்டில் பூக்கள் கவிதை நூல் எனும் புத்தகம் வெளியிட்டு பதினொரு வயதில் விருது பெறும் பெண் என விழிக்கப்பட்டு விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கலை, இலக்கியம், ஊடகம், சமூகம் மற்றும் ஆன்மீகப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சாதனை படைத்த 20 பெண்களுக்கு ‘வீரவனிதையர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், சமூகத்தின் தூய்மைக்காகப் பாடுபடும் பெண் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு புடவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டு பெண்களின் ஆளுமை மற்றும் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது விழா அமைந்திருந்தது.
தொழிலதிபர் பி.எஸ்.செல்வரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில், பிரதம அதிதியாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், சிறப்பு அதிதியாக தமிழகத்திலிருந்து வருகை தந்த புதுக்கோட்டை தமிழ் சங்க தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.
விருது வழங்கலைத் தொடர்ந்து, இளங்கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன், சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழா அமைந்திருந்தது.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










