பண்டாரவளையில் அமைந்துள்ள அயிஸ்லெபி தமிழ் வித்தியாலயத்தில் 17.03.2026 அன்று மாணவர்களுக்கு உதவித் திட்டம் ஒன்று CERA Sri Lanka அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் திலகராணி நடராஜாவின் ஒழுங்கமைபில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த நேரடி உதவி தண்ணீர் (Direct Help Water Swaziland) அமைப்பின் நிதி உதவியுடன், CERA Sri Lanka அமைப்பின் திட்டமிடலின் கீழ், புயல் மற்றும் வெள்ள நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட உதவியின் மூலம் 350 மாணவர்களுக்கு சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள், பாடசாலைப் பைகள் மற்றும் எழுத்து பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் உரையாற்றிய வித்தியாலய அதிபர், இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் என்பதையும், பெற்றோரின் கடும் வறுமையால் பல மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தும் நிலை உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாடசாலை நிர்வாகம், மாணவர்களுக்கு உணவு வழங்கும் நோக்கில் “ஒரு பிடி அரிசி” திட்டத்தை நடைமுறைப்படுத்தி, மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்படும் அரிசியுடன் சாம்பார் சேர்த்து மதிய உணவினை வழங்கி வருகின்றது. மேலும், மாணவர்களுக்கு உள்ளாடை பற்றாக்குறை, பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதாரப் பொருட்கள் (pads) போன்ற அடிப்படை தேவைகளும் பெரிதும் நிலவுகின்றன எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய நேரடி உதவி தண்ணீர் அமைப்பின் திட்ட இணைப்பாளர் சுதாகரன் கணபதிப்பிள்ளை, சிறப்பாக கல்வியில் முன்னேறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ஆதரவு வழங்க குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் முன்வரும் “மாணவர் பொறுப்பு திட்டம்” (Student Sponsorship Program) விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்நிகழ்வின் தொடக்க விழாவானது, திட்ட இணைப்பாளர் சுதாகரன் கணபதிப்பிள்ளை மற்றும் அவரது துணைவியார், CERA அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான கிறிஸ்டி ஜெயசுதாசன் மற்றும் அவரது துணைவியார், பாஸ்கரன், வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த உதவித் திட்டம், பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வரும் மாணவர்களுக்கு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது என நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.




















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










